மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 43 % பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 26 % பேர் மீது குற்ற வழக்குகள் இருந்த நிலையில், இம்முறை அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் வெற்றி பெற்ற 539 எம்.பி.க்களில் 233 எம்.பி.க்கள் மீது அதாவது 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
இதில் பாஜகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 116 எம்.பிக்கள், அதாவது 39 % எம்.பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதேபோல, காங்கிரஸில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 29 எம்.பிக்கள் (57 %) மீதும், ஐக்கிய ஜனதா தளத்தில் 13 எம்.பிக்கள் (81 %) மீதும், திமுகவில் 10 எம்.பிக்கள் (43 %) மீதும், திரிணமூல் காங்கிரஸில் 9 எம்.பி.க்கள் (41 %) மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் பாலியல் குற்றச்சாட்டு, கொலை மற்றும் கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் வழக்குகளில் 29 % எம்.பிக்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 185 எம்.பிக்கள் மீது (34 %) குற்ற புகார்களும், 112 எம்.பி.க்கள் மீது கடும் குற்ற வழக்குகளும் பதிவாகியிருந்தன.
அதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 162 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகளும் பதிவாகி இருந்தன.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், பாஜக எம்.பிக்கள் 5 பேர், பகுஜன் சமாஜ கட்சி எம்.பிக்கள் 2 பேர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா ஒரு எம்.பி. மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர்களில், போபால் தொகுதியின் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் மீது 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.