காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை (மே 27) விசாரணை நடத்தவுள்ளது.
லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில், ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் சேகர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, லண்டன் சொத்துகள் தொடர்பாக தங்கள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேராவும், அரோராவும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.