பாட்னா: காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் லாலு பிரசாத், உங்கள் முடிவு தற்கொலைக்கு சமமானது என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் மகாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பு லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ராஜினாமா செய்வது என்று ராகுல் எடுத்திருக்கும் முடிவானது தற்கொலைக்கு சமம். பாஜகவை வீழ்த்துவது என்பது ஒன்றே எதிர்க்கட்சிகளின் பிரதான லட்சியம். ஆனால் அதை நிறைவேற்ற தவறிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத் யாதவ், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகளால் மிகவும் மனம் நொந்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகின.
எனினும், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் லாலு, ஒரு வேளை காந்தி குடும்பத்தைச் சேராத யாரேனும் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு அமர்த்தினால், அவர்களை கைப்பாவை அல்லது பொம்மை என்று விமரிசனம் செய்வார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்றும் லாலு வலியுறுத்தியுள்ளார்.