ஒடிசா மாநிலத்தில் பாலாசோர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி, தனது சைக்கிளில் ஒற்றைப் பையுடன் தில்லிக்கு பயணமாகியுள்ளார்.
குடிசை வீட்டில் வசித்து வந்த சாரங்கிக்கு திருமணம் ஆகவில்லை. தாயும் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். ஒடிசாவின் எளிமையாக வாழ்ந்து, ஏழை எளிய மக்களுக்காக சேவையாற்றி வந்த சாரங்கி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
இவரது எளிமையான வாழும் முறை சமூக வலைத்தளங்களில் பரவியதால் இவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது. சைக்கிளிலேயே சென்று பிரசாரம் செய்த சாரங்கியைப் பற்றிய புகைப்படங்களும் செய்திகளும் வைரலானது.
பட்டதாரியான சாரங்கி சன்னியாசி ஆக விரும்பி ராமகிருஷ்ண மடத்தை நாடினார். ஆனால், அவர் சமூக சேவை செய்ய வேண்டும் என்று ராமகிருஷ்ண மடம் அறிவுறுத்தியதால் தொடர்ந்து மக்கள் சேவை செய்து வந்தார். பல பகுதிகளில் இவர் ஏராளமான பள்ளிகளைத் திறந்திருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
அது மட்டுமல்ல.. பாலாசோர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கோடீஸ்வர வேட்பாளர்களை எல்லாம் வீழ்த்தி, பிரதாப் சாரங்கி வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம்பியாக தேர்வான சாரங்கி, மக்கள் பிரதிநிதியாக தனது கடமையை நிறைவேற்ற ஒற்றைப் பையுடன் புது தில்லி நோக்கி சைக்கிளில் பயணமாகியுள்ளார்.