குஜராத் மாநிலம், சூரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸாரின் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றி படேல் சமூக தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஹார்திக் படேலை காவல் துறையினர் கைது செய்தனர்.
சூரத் நகரின் சர்தானா பகுதியில் 4 மாடி வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 18 மாணவிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து நடைபெற்ற வளாகத்தை ஹார்திக் படேல் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது, ஹார்க் படேலை அவரது முன்னாள் கூட்டாளி ஒருவர் தாக்கினார். வளாகத்தை பார்வையிட்ட பின்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ஹார்திக் அறிவித்தார்.
தீ விபத்தை உடனடியாக கட்டுப்படுத்த தவறிய காரணத்துக்காக, தீயணைப்புத் துறை, அந்த நகர மேயர், நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மீது குஜராத் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஹார்திக் படேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அந்த பகுதி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் காவல் துறையினர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில், காவல் துறையினரின் மறுப்பையும் மீறி, போராட்டத்தில் ஈடுபட சென்றதாக, ஹார்திக் படேல் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு ஹார்திக் படேல் அனுமதி கோரியிருந்தார். வணிக வளாகத்தின் முன்பு ஞாயிற்றுக்கிழமை அவர் தாக்கப்பட்டார். அதனால் அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது.
ஆனால் அதையும் மீறி, உண்ணாவிரத போராட்டம் நடத்த ஹார்திக் முயன்றதால், அவரை கைது செய்தோம் என்றார்.
இந்நிலையில், தனது நண்பரை பார்க்க ஹார்திக் படேல் சென்றபோது, காவல் துறையினர் அவரை கைது செய்ததாக படேலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.