ஒடிஸாவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள தமது அரசின் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
புவனேசுவரத்தில் வரும் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில், மாநில முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிஜு ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ஒடிஸா புதிய அரசின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்து பிரதமருக்கு சிறப்பு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றன.
ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசியபோது, ஒடிஸாவில் பாஜக அரசு பதவியேற்பு விழா அடுத்து நடைபெறும், அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒடிஸாவுக்கு வருவேன் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமது பதவியேற்பு விழாதான் அடுத்து நடைபெறும், அதற்கு மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என நவீன் பட்நாயக் கூறியிருந்தார்.
இதேபோல், மோடிக்கு நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்திருப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒடிஸா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதன்மூலம், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மாநில முதல்வராக நவீன் பட்நாயக் வரும் புதன்கிழமை 5ஆவது முறையாக பதவியேற்க இருக்கிறார்.