நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கவுள்ள விழாவுக்கு இலங்கை அதிபர், வங்கதேசம் அதிபர், பூடான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் பங்கேற்கலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்கவுள்ள வெளிநாட்டு தலைவர்கள் பட்டியலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது.
அதன்படி மியான்மர் அதிபர் வின் மியிந்த், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பெகோ, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, வங்கதேசம் அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறீசேனா, நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத், தாய்லாந்து சிறப்பு தூதர் கிரிஸடா ஆகியோர் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும், பிம்ஸ்டெக் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.