ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம்: கடந்த 5 ஆண்டுகளில் 60 % உயர்வு

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம்: கடந்த 5 ஆண்டுகளில் 60 % உயர்வு

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. முறையான  டிக்கெட் இன்றி 75,000 பேர் பயணம் மேற்கொள்வதாக அதிர்ச்சி

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. முறையான  டிக்கெட் இன்றி 75,000 பேர் பயணம் மேற்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2.30 கோடி பேர் பயணம்: நாடு முழுவதும் 3,500 ரயில்கள், 4,600 முன்பதில்லாத  ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று 13,100  ரயில்கள் தினசரி  இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரி 2.30 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது. ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்நிலையம் வந்தடையும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் குழு திடீரென சோதனை நடத்தி, டிக்கெட் இன்றி பயணிப்போர்களை பிடித்து,அவர்களிடம் அபராதம்  வசூலித்து வருகிறது. 

60 சதவீதம் உயர்வு: இந்நிலையில்,  நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில்  ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போர் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாள்தோறும் முறையான  டிக்கெட் இன்றி 75,000 பேர் பயணம் மேற்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

டிக்கெட் இன்றி பயணிப்போரைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி மூலமாக, ரயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டு  ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு  மார்ச் வரை ரூ.5,944.71 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 
 2014-ஆம் ஆண்டுக்கும் , 2019-ஆம் ஆண்டுக்கும் இடையே டிக்கெட் இன்றி பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை  60 சதவீதம் உயர்ந்துள்ளது.
100 சதவீதம் உயர்வு: டிக்கெட் இன்றி ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை பொருத்தவரை, 2014-15-ஆண்டில் 1.87 கோடி பேர் பிடிபட்டனர். இது கடந்த ஆண்டு 2.76 கோடியாக அதிகரித்தது. டிக்கெட் இன்றி பயணிப்போருக்கு அபாரதம் வசூலித்தது  மூலமாக, கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வேக்கு கிடைத்த வருவாய் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்தது தொடர்பாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017-ஆம் ஆண்டு  மார்ச் வரை 2.56 கோடி பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலமாக ரூ.952.15 கோடி
வருவாய் கிடைத்தது.  2018-ஆம் ஆண்டு  ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு மார்ச் வரை  டிக்கெட் இன்றி பயணித்தது தொடர்பாக , 2 கோடியே 75 லட்சத்து 67 ஆயிரத்து 971 பேர் பிடிபட்டனர். இவர்களுக்கு அபராதம் விதித்தது மூலமாக, ரயில்வேக்கு ரூ.1,822.62 கோடி வருவாய் கிடைத்தது. 
வருவாய் இழப்பு:  2016-17-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்ற ரயில்வே குழு 2018 -ஆம் ஆண்டில்  ஆய்வு செய்தது. இதில், டிக்கெட் இன்றி பயணம் செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தது. 

16 மண்டலங்களில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போர்களுக்கு எதிராக பறக்கும்படை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இதில், டிக்கெட் பரிசோதகர்களுக்கு நிரந்தர இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனாலும்,  டிக்கெட் இன்றி பயணிப்போரை தடுக்க போதுமான டிக்கெட் பரிசோதர்கள் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

காலி பணியிடங்களை நிரப்பவில்லை: இது குறித்து டிக்கெட் பரிசோதகர்கள் கூறியது: தெற்குரயில்வே மற்றும் மற்ற  ரயில்வே மண்டலங்களில் கடந்த 4 ஆண்டுகளாக  டிக்கெட் பரிசோதகர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை என்று தெரிவித்தனர்.
இது குறித்து ரயில்வே மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, டிக்கெட் பரிசோதகர்களுக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com