விமானப் போக்குவரத்துத் துறை ஊழலில் இடைத்தரகர் தீபக் தல்வாரின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
துபையில் வசித்து வந்த தீபக் தல்வார் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஏர் அரேபியா, கத்தார் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கு அனுமதி பெற்றுத் தர உதவினார் எனவும், இந்த உதவியைச் செய்ததன் மூலம், ஏர்-இந்தியா விமான நிறுவனத்துக்கு பெரிய அளவில் தீபக் தல்வார் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவியதற்காக, அந்த நிறுவனங்களிடம் இருந்து தீபக் தல்வார் ரூ.272 கோடி பெற்றார் எனவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவரது மனுவைக் கடந்த 1-ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அந்த மனுவை நிராகரித்ததுடன், வெளிநாட்டில் இருக்கும் தீபக் தல்வாரின் மகன் ஆதித்யா தல்வாருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையையும் பிறப்பித்தது.
தீபக் தல்வாரின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சந்திரசேகர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, தல்வாரின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.