2018-19ஆம் நிதியாண்டில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்ஏஎல்) வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவு ரூ.19,705 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் 7.8 சதவீத உயர்வாகும்.
2018-19ஆம் நிதியாண்டில் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2,282 கோடியாகும். இது முந்தைய ஆண்டில் ரூ.1,987 கோடியாக இருந்தது. மேலும், 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.662 கோடி இடைக்கால ஈவுத்தொகையை இந்நிறுவனம் ஏற்கெனவே வழங்கியுள்ளது.
நிகழ் நிதியாண்டில் இலகு ரக போர் விமானம், இலகு ரக ராணுவ ஹெலிகாப்டர் ஆகியவை தயாரிப்புக்கான பணி தங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக ஹெச்ஏஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.1,000 கோடி கடன் வாங்கும் நிலை நிகழாண்டின் தொடக்கத்தில் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை முன்வைத்து, மத்திய பாஜக அரசை காங்கிரஸ் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.