புது தில்லி: தில்லியில் வியாழனன்று நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கேரள மாநில முதலவர் பினராயி விஜயன் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (வியாழக்கிழமை) மாலை 7 மணிக்கு மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் என சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்புக்கு விடுக்கப்பட்டது. மம்தா பானர்ஜி தொடக்கத்தில் இந்த அழைப்பை ஏற்ற நிலையில், புதனன்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்று டி.ஆர். பாலு செவ்வாயன்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தில்லியில் வியாழனன்று நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கேரள மாநில முதலவர் பினராயி விஜயன் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் இரண்டாவது முதல்வர் பினராயி விஜயன் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கேரள மாநில வளர்ச்சி தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கு என விஜயன் இரண்டு முறை நேரம் கேட்ட பொழுது, மோடி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.