நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி நாளை மாலை 7 மணிக்கு பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு உலகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் என பல பேருக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இது சம்பிரதாய நிகழ்வு என்பதால் அழைப்பை ஏற்று பங்கேற்கப் போவதாக மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள குறிப்பில்,
"புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்று, அதில் பங்கேற்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜக தெரிவித்து வரும் செய்தி, கடந்த ஒருமணி நேரமாக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் தவறானது. மேற்கு வங்கத்தில் அரசியல் கொலைகள் ஏதும் நிகழ்ந்ததில்லை. இந்த மரணங்கள் சொந்தப் பகை, குடும்பச் சண்டை அல்லது மற்ற பிரச்னைகள் காரணமாக நிகழ்ந்திருக்கக்கூடும். இதற்கும் அரசியலுக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. அதற்கான பதிவுகள் ஏதும் எங்களிடம் இல்லை.
என்னை மன்னித்து விடுங்கள் மோடி. இந்த நிகழ்வு என்னை பதவியேற்பு விழாவில் பங்கேற்கவேண்டாம் என்று நிர்பந்தித்துள்ளது.
இந்த விழாவானது, ஜனநாயகத்தைக் கொண்டாடும் பிரம்மாண்டத் தருணம் ஆகும். எந்தவொரு கட்சியும், இதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி அதன் மதிப்பை இழக்கச் செய்யக்கூடாது" என்றார்.