போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்தலில் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நூதன தண்டனையை விதித்துள்ளது மாநில அரசு.
700 பள்ளிகளைச் சேர்ந்த 3,500 ஆசிரியர்களும், பொதுத் தேர்வெழுதி, பாடத்திட்டத்தில் என்னப் பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறியுமாறு மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்வில் 40 சதவீத 10ம் வகுப்பு மாணவர்களும், 30 சதவீத 12ம் வகுப்பு மாணவர்களும் தோல்வி அடைந்தனர். இதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12ம் தேதி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. அதிக தோல்வி விகிதத்தைக் கொண்ட பள்ளியின் ஆசிரியர்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது. ஒரு வேளை ஆசிரியர்கள் இந்த தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து அவர்களது கல்வித் திறன் கண்காணிக்கப்படும். ஒரு வேளை கல்வித்திறனை உயர்த்திக் கொள்ளவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறப்படுகிறது.