ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை காவலராக அந்த மாநில அரசு நியமித்துள்ளது.
அல்வாரின் தனகாஜி பகுதியில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தலித் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி 5 பேர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தலின்போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சி திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அதேபோல், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசிக்கப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை காவலராக ராஜஸ்தான் அரசு செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமை செயலர் (உள்துறை) ராஜீவ் ஸ்வரூப் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணை காவலராக நியமிப்பது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பெண் பணி நியமன கடிதத்தை பெறுவார் என்றார்.