புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனை எம்.பி.க்கள் அனைவரும் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 17-ஆவது மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 இடங்களிலும், சிவசேனை 18 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மக்களவைக்கு தேர்வான எம்.பி.க்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர். இந்த நிலையில், கல்யாண் மக்களவை தொகுதியில் சிவசேனை சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் ஷிண்டே தெரிவித்துள்ளதாவது:
மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவர்கள் விருப்பம்போல் எந்த மொழியில் வேண்டுமானாலும் பதவியேற்றுக் கொள்ளலாம். ஆனால், எங்கள் மண்ணை பெருமைப்படுத்தும் விதத்தில் மராத்தி மொழியில் பதவியேற்பதையே கௌரவமாக கருதுகிறோம்.
மேலும், சிவசேனை கட்சி தோற்றுவிக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே மராத்தி மண்ணை பாதுகாக்கவும், மராத்தி மொழியை மேம்படுத்துவதற்காகவும் மட்டுமே. எனவே, எங்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் மராத்தி மொழியிலேயே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வோம் என்றார் அவர்.