மிஸோரம் மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநில கலால் மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆணையர் கூறுகையில், சட்டப்பேரவையில் மிஸோரம் பூரண மதுவிலக்கு சட்டம், 2019 மார்ச் 20-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஏப்ரல் 1-ஆம் தேதி பூரண மது விலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவடையும் வரை, பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. கடந்த 27-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. அதனால் பூரண மதுவிலக்குக்கான அறிவிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மிஸோரமில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முந்தைய காங்கிரஸ் அரசு, மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த மிஸோ தேசிய முன்னணி அரசு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி தற்போது பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.