விஜயவாடாவில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்ட விழாவில் ஆயிரக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு மத்தியில் ஆந்திரப் பிரதேச முதல்வராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி (46) பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு, ஆந்திரத்தின் 2-ஆவது முதல்வராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விஜயவாடா அருகே உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று நண்பகல் 12.25க்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில் முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான ஆந்திர மக்களும் கலந்து கொண்டனர்.
கட்சித் தொடங்கிய 9 ஆண்டுகளில் எந்த பெரும் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல் முறையாக முதல்வராகும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்து, பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் ஆளாக தனது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார். அப்போது கரகோஷம் விண்ணை முட்டியது.
ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதுவரை இல்லாத வகையில், ஆந்திர முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சியை தில்லியில் உள்ள ஆந்திர அரசு இல்லத்தில் காணொலிக்காட்சி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, முன்னதாக நேற்று திருப்பதி வெங்கடாசலபதி கோயில், கடப்பா அமின் பீர் தர்கா, தனது சொந்த ஊரான புலிவேந்துலாவில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் ஆகியவற்றில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வழிபாடு செய்தார்.
புகைப்படம் நன்றி - ஏஎன்ஐ