அனைத்து தேர்தல் ஆணையர்களும் ஒரே முடிவை எடுக்க வேண்டியது அவசியமில்லை: சுனில் அரோரா

அனைத்து தேர்தல் ஆணையர்களும் ஒரே மாதிரியான முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.
அனைத்து தேர்தல் ஆணையர்களும் ஒரே முடிவை எடுக்க வேண்டியது அவசியமில்லை: சுனில் அரோரா


அனைத்து தேர்தல் ஆணையர்களும் ஒரே மாதிரியான முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல் புகாரை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது. எனினும் இதற்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பெரும்பான்மையான தேர்தல் ஆணையர்களின் முடிவுக்கு ஏற்ப மோடி, அமித் ஷா மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை வைத்து தேர்தல் ஆணையத்தை அப்போது குற்றம்சாட்டிய காங்கிரஸ், மர்மங்களின் முன்னோடியாகத் திகழ்ந்து, அரசமைப்புச் சட்டத்தைத் தேர்தல் ஆணையம் மீறி வருகிறது என்று கூறியிருந்தது.
இது தொடர்பாக அப்போது தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் இடம்பெறும். ஆனால், அந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிடும் இறுதி அறிக்கையில் தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பு விவரங்கள் இடம்பெறாது எனப் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.
இப்போது மக்களவைத் தேர்தல் நிறைவுபெற்றுள்ள நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா புதன்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
சில நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் நாம் உரக்கப் பேச வேண்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் சர்ச்சையை அதிகரிக்கக் கூடாது என்ற காரணத்துக்காகவே அமைதியாக இருக்க வேண்டியிருந்தது. நம்மைச் சுற்றி சர்ச்சை ஏற்படும்போது பதிலளிக்காமல் அமைதிகாப்பது கடினமானது என்றாலும், கடமையைக் கருதி அதனைக் கடைபிடிக்க வேண்டியிருந்தது. தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக செயல்படுவதற்கு, ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் அல்ல. இப்போது மட்டுமல்ல, முன்பும் தேர்தல் ஆணையர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்கள் (மோடி, அமித் ஷா மீதானது) தொடர்பாக உண்மையான தகவல்களின் அடிப்படையில் நேர்மையாகவே முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com