உ.பி.: கள்ளச் சாராய பலி 15-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது

உத்தரப் பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை காவல் துறையினர்


உத்தரப் பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
பாரபங்கி மாவட்டத்தின் ராம் நகர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினர் சிலர்  அங்குள்ள மதுக்கடையில் திங்கள்கிழமை இரவு சாராயம் குடித்தனர். சாராயம் குடித்த சில மணி நேரத்தில் அவர்களது உடல்நிலை மோசமானது. இதைக் கண்ட உறவினர்கள், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உயர்மட்ட குழுவை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 
இதுதொடர்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஜய் சாஹினி கூறுகையில்,  ராம் நகரில் மதுக்கடையை நடத்த தன்வீர் சிங் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் பப்பு ஜெய்ஷ்வால் என்பவர் கடையை நடத்தியுள்ளார். மதுக்கடையில் வேலை செய்த மூவரையும் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தோம். அதையடுத்து புதன்கிழமை அதிகாலை கடையை நடத்தி வந்த பப்பு ஜெய்ஷ்வாலை கைது செய்தோம். அவரை கைது செய்ய சென்றபோது, அவர் தப்பிக்க முயன்றதால் அவரின் முழங்காலில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, அந்த மதுக்கடைக்கு சொந்தமான கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தன்வீர் சிங் உள்பட மேலும் சிலரை தேடி வருகிறோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார்.
முன்னதாக, பணியில் அலட்சியமாக இருந்ததற்காக, கலால் துறை அதிகாரிகள், காவலர்கள், போலீஸார் உள்பட 12 பேரை பணியிடை நீக்கம் செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com