கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்தால் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏ.க்களிடையே ஒற்றுமையில்லை. கூட்டணி ஆட்சியில் இரு கட்சிகளிடையே ஒற்றுமையில்லாததால் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டணி அரசின் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிக்காது. ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால், இடைத்தேர்தல் வரும். ஆனால், இடைத்தேர்தலை பாஜக விரும்பவில்லை. எனவே, கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்தால், பாஜக ஆட்சி அமைக்கும்.
மேலும், ஜிந்தால் குழுமத்துக்கு நிலம் வழங்கும் அரசின் முடிவைக் கண்டித்து, மாநில அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஜூன் 5-ஆம் தேதி பாஜகவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் போராட்டத்தின் செயல் வடிவம் குறித்து முடிவெடுக்கப்படும்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் பாஜகவின் சார்பில் 25 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, மத்திய அமைச்சரவையில் மாநிலத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. பிரதமர் மோடியைச் சந்தித்து, மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்றார்.