பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 16 பேருக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையை அறிவித்துள்ளது.
அவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.25,000 முதல் ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.என்.மிஸ்ரா புதன்கிழமை இந்த தீர்ப்பை வழங்கினார்.
பிகாரில் கடந்த 1990-களில் சைபாஸா கருவூலத்தில் கால்நடைத் தீவனத்துக்கான நிதி ரூ.37 கோடியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்திருந்த துணை குற்றப்பத்திரிகையில் 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார். 3 பேர் இறந்து விட்டனர்.
இந்நிலையில், சைபாஸா கருவூலத்தின் முன்னாள் அலுவலர்கள், கடந்த 2013-இல் ஊழல் அம்பலமானபோது பணியில் இருந்த அலுவலர்கள் அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-இல், இதே ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் உள்ளிட்ட 44 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, வேறு 3 கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவற்றில் ஒரு வழக்கில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கை எதிர்கொண்டுள்ள அவர், தற்போது ராஞ்சியில் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.