ஜனநாயகத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தேசிய செயலர் சஞ்சய் தத் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடரும். வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, மத்திய அரசுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் புதுவை மக்கள் சிறந்ததொரு தீர்ப்பை அளித்துள்ளனர்.
அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர் வெ.வைத்திலிங்கத்தை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்திருப்பதால், புதுவை மக்களின் பிரச்னைகளுக்கு மக்களவையில் அவர் குரல் கொடுப்பார்.
நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, புதுவை மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் சஞ்சய் தத் பேசியதாவது:
கடந்த சில நாள்களாக காங்கிரஸ் கட்சியினர் மன உளைச்சலில் உள்ளனர். இதற்குக் காரணம் ராகுல் காந்தி தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்ததுதான். அவரது இந்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் வெற்றி தற்காலிகமானது. நாட்டின் ஜனநாயகம், ஒருமைப்பாடு ஆகியவை காக்கப்பட வேண்டும். அதற்கு ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும். எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
அதற்கு அடையாளம்தான் புதுவையின் வெற்றி. பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ராகுல் காந்தி தலைமையில் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என்றார் அவர்.