பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துக் கொள்ளும் மாநாடு தேதி மற்றும் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, இந்திய- சீன நாட்டின் எல்லைப்பகுதியான டோக்கா லாம் பகுதியில் நிலவி வந்த போர் பதற்றமும், மோதல் போக்கும் முடிவுக்கு வந்தது. அந்த மாநாட்டில், இரு நாட்டின் எல்லைகளிலும் ராணுவத்தினரிடையே, ஒற்றுமையுணர்வுடன் போதுமான ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, பிரதமராக மீண்டும் மோடி வெற்றி பெற்றதையடுத்து இந்தியா-சீனா இடையிலான அடுத்தகட்ட மாநாடு நடத்துவது தொடர்பாக தூதரக அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது: இந்தியா- சீனா இரு நாடுகளுக்கிடையிலான மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து, இருநாட்டின் அதிகாரிகளும் ஆலோசித்து வருகிறோம். வூஹானில் நடைபெற்ற மாநாட்டின்போது, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் சம்மதம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இருநாட்டின் தூதரக அதிகாரிகள் அளவிலும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் மாநாடு நடைபெறும் தேதி, இடம் குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.