உடல்நிலையை காரணம் காட்டி, புதிய அமைச்சரவையில் தமக்கு இடம் வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார்.
சுட்டுரையில் ஜேட்லி வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 18 மாதங்களாகவே, உடல்நிலை தொடர்பான தீவிர சவால்களை எதிர்கொண்டு வருகிறேன். எனது மருத்துவர்கள், அந்த சவால்களில் பெரும்பாலானவற்றில் இருந்து என்னை விடுவித்து விட்டனர். தேர்தல் பிரசாரம் முடிந்ததும், கேதார்நாத்துக்கு நீங்கள் சென்றீர்கள். பிரசாரத்தின்போது அளித்த பொறுப்புகள், எதிர்காலத்தில் அளிக்கப்பட இருக்கும் பொறுப்பு ஆகியவற்றில் இருந்து விடுவிக்கும்படி, உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பொறுப்புகளில் இருந்து விடுவித்தால் மட்டும்தான், எனது உடல்நிலை மற்றும் சிகிச்சை மீது என்னால் உறுதியாக கவனம் செலுத்த முடியும்.
மோடியின் முதலாவது அரசில் கடந்த 5 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்ததை மிகப்பெரிய அனுபவமாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் அரசிலும், மக்களவையில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்தபோதும் எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது. இதையும் மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறேன் என்று அதில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.