அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து ராபர்ட் வதேரா இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்தது.
அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்தது. இந்நிலையில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் சேகர் முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் அமலாக்கத் துறை மனு குறித்து பதிலளிக்க ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சந்தர் சேகர் உத்தரவிட்டார். இந்நிலையில், தில்லியில் விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பிருந்தது.
இதையடுத்து தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா இன்று காலை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.