புது தில்லி: என்னமா வெயில் கொளுத்துது என்று புலம்பிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகளை விடவும், வெயிலா இது என்று பெருமூச்சு விடும் திருத்தணிவாசிகளை விடவும் தில்லிவாசிகள் நிலைதான் மிகவும் கொடுமை.
நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு தில்லி முழுக்க பரபரப்பாகக் காணப்பட்டது. ஆனால், அதையெல்லாம் தாண்டி கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. கொஞ்சநஞ்சமல்ல.. நேற்று தில்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 116.24 ஃபாரன்ஹீட்.
2013ம் ஆண்டு மே மாதம் புது தில்லியின் பாலம் பகுதியில் 116.96 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானதே இதுவரை உச்சபட்ச வெப்பமாக உள்ளது. அதன்பிறகு 2019ம் ஆண்டு மே மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக மாறியுள்ளது.
இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பம் எப்போது என்று தெரியுமா? தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள். அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாகவே புது தில்லியின் இதரப் பகுதிகளை விட பாலம் பகுதியில் வெப்பநிலை ஒன்று அல்லது 2 டிகிரி அளவுக்கு அதிகமாகவே காணப்படும். விமானப் போக்குவரத்து காரணமாக இந்த வெப்பம் அதிகரிப்பதாகவும் கருதப்படுகிறது.
1998ம் ஆண்டு மே 26ம் தேதி தில்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையானது 119.12 ஃபாரன்ஹீட் ஆகும். அப்பாடா 120ஐத் தொடவில்லையே என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்களோ?