புது தில்லி: தில்லியில் இலங்கை அதிபர் சிறீசேனாவை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் மோடி வியாழனன்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறீசேனா உள்ளிட்ட எட்டு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தில்லியில் இலங்கை அதிபர் சிறீசேனாவை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.
தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்ற நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, மொரிசியஸ் பிரதமர் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.