ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யத் தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதற்கான இலைக்காலத் தடையை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யத் தடை நீட்டிப்பு


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதற்கான இலைக்காலத் தடையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ப.சிதம்பரம், கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களுக்கு எதிராக சிபிஐயும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 
கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இருவரையும் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை மே 30-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த விவகாரம், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீது விவாதிப்பதற்கு 3 வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது என்று அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான தடையை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com