சாலையில் விதிகளை மீறி வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் வகையில், அதி நவீன லேசர் கருவிகளை பயன்படுத்துவதற்கு குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் வகையில், போக்குவரத்து காவல் துறைக்கு ரூ. 3. 9 கோடி செலவில் 39 லேசர் கருவிகள் அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஆமதாபாத் நகர போக்குவரத்து காவல் துறைக்கு 5 லேசர் கருவிகளும், மற்ற மாவட்ட அதிகாரிகளுக்குத் தலா ஒரு லேசர் கருவியும் விரைவில் அளிக்கப்படவுள்ளது.
இந்த கருவி, ஒரு வினாடியில் 3 வானங்களின் வேகத்தை மதிப்பிடும் திறனுடையது; வாகனங்கள் 1 கி.மீ தொலைவில் இருந்தாலும் அதன் வேகத்தை துல்லியமாக மதிப்பிடும்.
இந்த கருவியில் இணையச் சேவையும் உள்ளது. அதன் மூலம் வேகமாக செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் வாகனத்தின் புகைப்படத்துடன் விதிமீறல்குறித்து தகவல் அனுப்ப இயலும்.
அதுமட்டுமன்றி, இந்த கருவியில் வேகமாக செல்லும் வாகனங்களை விடியோவாக பதிவு செய்ய முடியும். அதனால் வேகமாக செல்லவில்லை என்று போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களிடம் பதிவான விடியோவை ஆதாரமாக காட்டலாம்.
இந்த கருவியை உபயோகப்படுத்தும் விதம் குறித்து போக்குவரத்து காவலர்களுக்கு ஆமதாபாதில் உள்ள காவலர் பயிற்சி அகாதெமியில் 3 நாள் வகுப்புகள் நடைபெற உள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.