தில்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்-சமாஜவாதி ஆகிய கட்சிகள் அமைத்த கூட்டணிக்கும் வெற்றி கிடைக்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் தரும் முடிவுகள் கிடைத்தன. தேசிய அளவில் கடந்த தேர்தலைவிட அதிக இடங்களைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை இன்று நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது. ஜுன் 6-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட இருப்பதால் அதில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்க திட்டமிருந்தனர்.
ஆனால் இந்த கூட்டத்தில் சில தலைவர்கள் கலந்துகொள்ள முடியாத சூழல் உள்ளதால் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் யார் தலைமை வகிப்பார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.