மிஸோரம்: காங்கிரஸுடனான கூட்டணியை முறித்தது ஸோரம் மக்கள் இயக்கம்

மிஸோரம் மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் அமைத்திருந்த கூட்டணியை முறித்துக் கொண்டதாக ஸோரம் மக்கள் இயக்கம்


மிஸோரம் மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் அமைத்திருந்த கூட்டணியை முறித்துக் கொண்டதாக ஸோரம் மக்கள் இயக்கம் வியாழக்கிழமை தெரிவித்தது. 
இதுதொடர்பாக ஸோரம் மக்கள் இயக்கத் தலைவர் லாலியான்சாவ்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
காங்கிரஸுடனான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியானது, குடியேற்ற சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்டது. எனினும், மக்களவைத் தேர்தலில் எங்களது பொது வேட்பாளரான லால்ங்கின்லோவா ஹமர் தோல்வியடைந்தார். 
மக்களவைத் தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதை தவிர்த்து, கூட்டணி அமைப்பது தொடர்பாக எங்களுக்குள்ளாக எந்தவொரு எழுத்துப்பூர்வ நிபந்தனையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸுடனான கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம். 
மக்களவைத் தேர்தலில் எங்களது பொது வேட்பாளர் தோல்வியடைந்ததற்கு, மக்கள் காங்கிரஸை நிராகரித்ததே காரணமாகும். எங்களது கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக சக்மா இன மக்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் காங்கிரஸ் வாக்குகளை பெறத் தவறிவிட்டது என்று லாலியான்சாவ்தா கூறினார். 
மிஸோரம் மாநிலத்தில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி வேட்பாளர் லால்ரோசங்கா, சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸோரம் மக்கள் இயக்கம்-காங்கிரஸ் கூட்டணியின் பொது வேட்பாளர் லால்ங்கின்லோவா ஹமரை தோற்கடித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com