தில்லி திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், போலீஸார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
தில்லி திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனத்தை நிறுத்தும் விஷயத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த வாக்குவாதம் பின்னர் மோசமடைந்ததாக சம்பவத்தை நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலுக்கு இடையே போலீஸ் வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்ததாகவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த சம்பவத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகம் பரபரப்புக்குள்ளானது.