16-ஆவது ஆசியான்-இந்தியா மாநாடு, 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு, 3-ஆவது பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறைப் பயணமாக தாய்லாந்துக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
இந்த பயணத்தின் போது பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்தித்துப் பேச உள்ளேன். இந்த ஆசியான் கூட்டமைப்பு நமது ஜனநாயக அட்டவணையில் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக கிழக்கு ஆசிய பங்களிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கலாச்சாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நமது நாட்டின் முக்கிய கூட்டாளியாக ஆசியான் நாடுகள் திகழ்கின்றன.
கடல்வழி, வான்வழி மற்றும் டிஜிட்டல் வழி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் ஆசியான் நாடுகளுடன் ஸ்திரத்தன்மை மிக்க கூட்டு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வணிக ரீதியிலும், கடல்படையில் கூட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 25-ஆவது ஆசியான் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.