பிரபல இந்திய மணல் சிற்பக்கலைஞருக்கு இத்தாலியில் கிடைத்த அங்கீகாரம்!
ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக்கிற்கு இத்தாலியின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பங்களின் மூலமாக பிரபலமானவர். அவ்வப்போது நாட்டில் நடக்கும் முக்கியப் பிரச்னைகள், சமூக பிரச்னைகள், தலைவர்களின் பிறந்தநாள்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிற்பங்களை உருவாக்குவது வழக்கம். இந்த சிற்பங்களும் இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், மணல் சிற்பக்கலையில் சுதர்சன் பட்நாயக்கின் திறமையை பாராட்டி இத்தாலியின் உயரிய ‘கோல்டன் மணல் சிற்பக்கலை விருது’ அவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை இத்தாலியில் சர்வதேச மணல் சிற்பத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சுதர்சன் பட்நாயக்கிற்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுதர்சன் பட்நாயக், 'இத்தாலியின் விருது பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தாலி மணல் சிற்பத் திருவிழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது மிகவும் பெருமையாக உள்ளது' என்று கூறியுள்ளார்.