கந்த சஷ்டியையொட்டி, திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில், கடந்த மாத இறுதி முதல் கார்த்திகை மாத மகோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை சுப்ரமணிய சுவாமி ஹோமம் நடைபெற்றது. மகாபூர்ணாஹுதியுடன் இந்த ஹோமம் சனிக்கிழமை மாலை நிறைவுற்றது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை கோயிலில் நவகிரஹ ஹோமம் நடைபெற உள்ளது.