ஸ்ரீநகரில் பரபரப்பாக தென்படும் சந்தையில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அதேசமயம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் இன்னும் 100 சதவீதம் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1.20 மணியளவில் ஸ்ரீநகரின் ஹரி சிங் ஹை ரோடு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 41 வயது மிக்க ரிங்கு சிங் என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பாதுகாப்புப் படை அதிகாரிகள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள எஸ்எம்ஹெச்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் இதேபோன்று கையெறி குண்டு தாக்குதல் நடத்துவது முதன்முறையல்ல. கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நடத்திய கையெறி குண்டு தாக்குதல் 20 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.