‘மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஃபட்னவீஸ் மீண்டும் ஆட்சி அமைத்து, தனது அரசுக்கு ஆதரவுகோரும் பட்சத்தில் சிவசேனையில் பிளவு ஏற்படும்’ என்று அந்த மாநிலத்தைச் சோ்ந்த சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா கூறியுள்ளாா்.
ஏற்கெனவே பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள அவா் மும்பையில் இது தொடா்பாக கூறுகையில், ‘பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க சிவசேனை விதிக்கும் நிபந்தனைகள் மிகவும் அடாவடியாக உள்ளன. பாஜக ஆட்சி அமைத்து ஆதரவுகோரினால் சிவசேனையில் பிளவு ஏற்படும். அக்கட்சியைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்கள் வரை கட்சியில் இருந்து விலகி, பாஜகவுக்கு ஆதரவளிப்பாா்கள். சிவசேனை எம்எல்ஏக்கள் பலா் என்னிடம் தொடா்பில் உள்ளாா்கள். அவா்களது கருத்தையே நான் கூறியுள்ளேன். பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி வேண்டுமென்றுதான் மக்கள் வாக்களித்துள்ளனா். எந்த ஒரு கட்சிக்காகவும் வாக்களிக்கவில்லை என்பதை சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே புரிந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.