பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பிவிஆர் ஓரியன் மாலில் படம் பார்க்க வந்த சில இளைஞர்கள், தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காததும், அவர்களை ஒரு கும்பல் கண்டித்து திரையரங்கில் இருந்து விரட்டியடித்தது.
இது தொடர்பான விடியோ கடந்த வாரம் முழுக்க சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விடியோவை அடிப்படையாக வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது பெங்களூரு காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 23ம் தேதி அசுரன் படம் பார்க்க வந்த இளைஞர், இளைஞிகள், தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காமல் இருந்ததால், அங்கிருந்த ஒரு கும்பல் அவர்களை தட்டிக்கேட்டது.
அவர்களை பயங்கரவாதிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் திட்டி, திரையரங்கை விட்டே வெளியேற்றியது அந்த கும்பல்.
இந்த விடியோவைப் பார்த்த காவல்துறை, தேசிய கீதத்தை அவமதிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவின் கீழ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.