புது தில்லி: 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ரூ.820 கோடி அளவுக்கு செலவிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
மிகப் பழம்பெரும் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரூ.516 கோடி அளவுக்கு செலவிட்ட நிலையில், பாஜக ரூ.714 கோடிகளை செலவிட்டு சாதனை படைத்திருந்தது.
அதே சமயம், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து பாஜக இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், காங்கிரஸ் தரப்பில் மக்களவை மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.856 கோடி அளவுக்கு செலவிட்டதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ரூ.626 கோடியை விளம்பரத்துக்காகவும், ரூ.194 கோடியை வேட்பாளர்களுக்காகவும் செலவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் தகவலின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 8,20,89,33,152 ரூபாயை செலவிட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
இதில், தேர்தல் நிதியாக வெறும் ரூ.126 கோடியை மட்டுமே காங்கிரஸ் திரட்டிய நிலையில், கட்சி சார்பில் பெரிய அளவில் தொகை மக்களவைத் தேர்தலுக்காக செலவிடப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.