பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புடன் கண்டனம் தெரிவித்தன. மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த இந்நாளை கறுப்பு நாளாக அனுசரிப்போம் என்று முடிவெடுத்தன.
அதன்படி, இன்று #DeMonetisationDisaster, #BlackDay என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும், பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை பேரழிவிற்குள்ளாக்கியது. பல உயிர்களை பழியாக்கியுள்ளது. லட்சக்கணக்கான சிறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னும் நீதிக்கு முன்னாள் தண்டிக்கப்படவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.