பசுவின் பாலில் தங்கம் இருப்பதாக மேற்குவங்க பா.ஜ.க., தலைவர் கூறிய நிலையில், தன் இரு பசுகளுடன் வந்து கோல்டு லோன் கேட்ட நபரை கண்டு தனியார் அடகு நிறுவன அதிகாரிகள் வாயடைத்து போயினர்.
மேற்குவங்க பா.ஜ., தலைவர் திலீப் கோஷ், 'இந்திய பசுக்களில் ஒரு சிறப்பியல்பு உள்ளது. அதன் தொப்புலில் சூரியஒளி போன்று மின்னும் தங்கம் உற்பத்தியாகிறது. அதன் காரணமாக தான் பசுவின் பால் தங்கம் கலந்து மஞ்சள் நிறமாக இருக்கிறது' எனக் கூறியிருந்தார். அவரது இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் தன்குனி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனியார் அடகு நிறுவனம் ஒன்றிற்கு சென்று, 'பசுவின் பாலில் தங்கம் உள்ளதாக பா.ஜ., தலைவர் கூறியுள்ளார். எனது இரு பசுக்களின் பாலிலும் தங்கம் உள்ளது. அதனை அடகாக கொண்டு எனக்கு கோல்டு லோன் தாருங்கள். என்னிடம் உள்ள 20 பசுக்களுடன், கிடைக்கும் லோனைக் கொண்டு எனது தொழிலை விரிவுபடுத்திக் கொள்வேன்' எனக் கேட்டார்.
வாயடைத்து போன அதிகாரிகள் அவரை சமாளித்து அனுப்பி வைத்தனர். இவரது பேட்டியை தனியார் டிவி ஒளிபரப்ப, அவர் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார்.