உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தாய் மற்றும் சகோதரியின் இறந்த உடல்களுடன் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்துள்ளார்.
அயோத்தி ஆதர்ஷ் நகர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் கொடுத்ததை அடுத்து, காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். தீபா என்பவர், உயிரிழந்த அவரது தாயார் புஷ்பா ஸ்ரீவாஸ்தவா மற்றும் சகோதரி விபா ஆகியோரது உடல்களுடன் வசித்து வந்தது தெரிய வந்தது.
தீபாவின் தந்தை விஜேந்திர ஸ்ரீவஸ்தவா 1990ல் மறைந்த பிறகு, தீபா அவரது தாயார் மற்றும் இரண்டு சகோதரியுடன் வசித்து வந்தார். ஒரு ஆண்டுக்கு முன்னதாக சகோதரிகளில் ஒருவரும் இறந்துவிட்டார். இதனால் தீபா, அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் மற்றவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். மன ரீதியாக அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்துதான் தாயார் புஷ்பா மற்றும் சகோதரி விபா சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்கள். இருந்தபோதிலும், தீபா அவர்களின் சடலங்களுடன் வசித்து வந்துள்ளார். எலும்புகள் தெரியும் அளவுக்கு உடல்கள் சிதைந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைக்குப் பின்னர் அவரது நிலையைப் பொறுத்து காப்பகத்தில் சேர்க்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.