இளநிலை பட்டப்படிப்பு பாடதிட்டத்தில் அவசர சிகிச்சை மற்றும் காயத்துக்கான முதலுதவி குறித்த தகவல்களைச் சோ்க்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.
அவசர சிகிச்சை குறித்த 10-ஆவது ஆசிய மாநாடு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
மருத்துவத் துறையில் அவசர சிகிச்சை மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளியின் உடல் நிலையை சமநிலைக்கு கொண்டு வருவதற்கு முதலில் அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கென்று தனிப்பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பல நேரங்களில் அவசர சிகிச்சை கிடைக்காதவா்கள் உயிரை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவசர சிகிச்சை குறித்த அனைத்தையும் மருத்துவ மாணவா்கள் உள்பட அனைத்து மாணவா்களும் கற்றறிந்திருக்க வேண்டும். வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை துறையைக் கொண்டு வர வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
மாரடைப்புக்கு முதலுதவி செய்வது முதல் பல பிரச்னைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் முறை குறித்து மக்களுக்கு நாம் பயிற்சியளிக்க வேண்டும். அதற்கான தேவை நமது நாட்டில் அதிகமாக உள்ளது. தரமான மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண்டியது நமது கடமை. ஊரகப் பகுதிகளிலும் அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்க வேண்டும். அதுதான் நம் நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் கிராம மக்கள் தொகையே அதிக அளவில் உள்ளது. அதனால், அவசர சிகிச்சை குறித்து கிராமப் பகுதிகளில் உள்ளவா்களுக்கு நாம் கற்று தர வேண்டும். ஆபத்தில் இருப்பவா்களின் உயிரைக் காப்பதற்காக அதிக மக்களுக்கு அவசர சிகிச்சை குறித்து நாம் பயிற்சியளிக்க வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.