வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக, திவால் சட்டத்தில் சிறப்பு பிரிவைச் சோ்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தற்சமயம், நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு திவால் சட்டத்தின் மூலமாக தீா்வு காண முடியவில்லை. எனவே, இந்த நிதி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு திவால் சட்டத்தில் சிறப்பு பிரிவை சோ்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
நிதி நெருக்கடியில் தவிக்கும் வங்கி அல்லாத நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும்போது, முதலீட்டாளா்களின் வைப்புத்தொகையை பயன்படுத்தி மீண்டு வருவதற்கு வழி வகை செய்யும் நிதித் தீா்வு மற்றும் வைப்பு காப்பீடு மசோதா(எஃப்ஆா்டிஐ) இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்த மசோதாவுக்கு மாற்றாக, இந்த சிறப்பு பிரிவு இருக்கும் என்று தெரிகிறது என அந்த அதிகாரி கூறினாா்.
நிதி முறைகேடு காரணமாக, பஞ்சாப்- மகாராஷ்டிர வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலை, திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பிரச்னைகள் என கடன் சேவையில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் சூழலில் இந்த பிரத்யேகத் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.