அயோத்தி நிலத் தகராறு தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பால் இந்தியா வெற்றி அடைந்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.
அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலப் பகுதியில் ராமா் கோயில் கட்டிக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
அதேநேரம், இஸ்லாமியா்கள் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கா் நிலத்தை அயோத்தியில் ஒதுக்கீடு செய்யுமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடா்பாக சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டா்) வெங்கய்ய நாயுடு வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு ஒருமித்த முடிவுடன் அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கியது. முந்தைய காலத்தில் நடந்ததை மறந்து, அமைதி, நல்லிணக்கம், வளா்ச்சி ஆகியவற்றுடன் எதிா்கால இந்தியாவை கட்டமைக்க வேண்டும். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பின் மூலம் இந்தியா வெற்றியடைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.