அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பை யோகா குரு ராம்தேவ் வரவேற்றுள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் செய்தியாளர்களிடம் ராம்தேவ் சனிக்கிழமை கூறியதாவது:
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். எந்த நெருக்கடியோ, அழுத்தமோ இல்லாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும். மசூதி கட்டுவதற்கு மாற்று நிலம் ஒதுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.
அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை உலகுக்கு உணர்த்த, இரு சமூகத்தினருக்கும் கிடைத்த வாய்ப்பாக அயோத்தி தீர்ப்பு அமைந்துள்ளது.
மசூதியை கட்டுவதற்கு ஹிந்து சகோதரர்களும், கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்களும் பங்களிப்பதன் மூலம் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்த முடியும்.
எவரது உணர்வையும் புண்படுத்தும் வகையில் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றார் அவர்.
மேலும், அயோத்தி வழக்கில் நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியிருப்பதால், மறுஆய்வு மனு தாக்கல் செய்வதில் எந்த அர்த்தமும் கிடையாது என்று ராம்தேவ் கூறினார்.