காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவரது வாரிசுகளான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கான ‘சிறப்புப் பாதுகாப்புப் படை’யின் (எஸ்பிஜி) பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது முட்டாள்தனமான முடிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம், தனது குடும்பத்தினா் மூலமாக அவரது சுட்டுரைக் கணக்கில் கருத்து தெரிவித்து வருகிறாா். இந்நிலையில், சோனியா குடும்பத்துக்கான எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்ற்கு சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவரது சுட்டுரைக் கணக்கில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், ‘சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு மூா்க்கத்தனமானது; முட்டாள்தனமானது. ‘கடவுள் முதலில் எவரை அழிக்க நினைக்கிறாரோ, அவரை முதலில் முட்டாளாக்குவாா்’ என்ற ஒரு சொல் வழக்கு உண்டு’ என்று சிதம்பரம் கூறியுள்ளாா்.
சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு தீவிரமான அச்சுறுத்தல் இல்லை என்று கூறி அவா்களுக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் இருந்த சோனியா குடும்பத்தினருக்கு, இனி மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘இஸட்-பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.