அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும் என்று ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிரிட்யா கோபால் தாஸ் கூறுகையில், 'மாநிலத்தின் முதல்வராக அல்லாமல் கோரக்நாத் ஆலயத்தின் தலைமை குருவாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளைக்கு யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும்.
ராமர் கோவில் இயக்கத்திலும், கோரக்நாத் கோவில் நிர்வாகிகள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அதிலும், மஹந்த் திக்விஜய் சிங், மஹந்த் அவைத்யநாத் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ராம் இயக்கத்தை வழிநடத்தியதில் முக்கியமானவர்கள்.
ராமர் கோவில் அறக்கட்டளை, யோகி ஆதித்யநாத் தலைமையில் இருப்பதோடு, விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் சம்பத் ராய் மற்றும் வி.எச்.பி பொருளாளர் ஓம் பிரகாஷ் சிங்கால் ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.