உ.பியில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை தாக்கிய செய்தி மாணவர்கள் கும்பலாக சேர்ந்து அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளி உள்ளது. இங்கு மம்தா துபே என்பவர் குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியர் மம்தாவை தாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மாணவர்களில் ஒருவர் நாற்காலியை தூக்கி ஆசிரியர் மீது வீசியுள்ளார். இதையடுத்து ஆசிரியர் மாணவர்களின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடினார்.
மாணவர்கள், ஆசிரியர்களை தாக்கிய இந்த சம்பவம் வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் மேலாளர் கூறும்போது, 'அனாதைகள்' என திட்டியதால் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மம்தா வழக்கமாக மாணவர்களை திட்டிக்கொண்டே தான் இருப்பார் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இதுகுறித்து ஆசிரியர் மம்தா துபே கூறும்போது, 'காந்தி சேவா நிகேதன் மேலாளர் தன்னைத் தாக்க குழந்தைகளைத் தூண்டியுள்ளார். ஏற்கனவே எனக்கும் அவருக்கும் பல சமயங்களில் கருத்து வேறுபாடு, தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் தான் மாணவர்களை தூண்டியுள்ளார்' என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், 'பள்ளி நிர்வாகம் என்னை ஒருமுறை பணி நீக்கம் செய்தபோது, மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி நேஹா ஷர்மாவின் உதவியுடன் நான் மீண்டும் பணியமர்த்தப்பட்டேன். தற்போது, மாஜிஸ்திரேட் நேஹா ஷர்மா இடமாற்றம் செய்யப்பட்டதால் என்னை பணி நீக்கம் செய்ய மேலாளர் முயற்சிக்கிறார்' என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் மம்தா புகார் கூறியுள்ளார்.
ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாண்வர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியரை மாணவர்களே தாக்கிய இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.