நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதில், பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், 2 அவசரச் சட்டங்களை நிரந்த சட்டங்களாக நிறைவேற்ற மத்திய அரசு முழுவீச்சில் களமிறங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். அதுபோன்று நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.